தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image
புதுச்சேரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதுச்சேரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

07-03-2019 இன்றைய வானிலை -தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிகரித்த வெப்பம் - 1996 ஆம் ஆண்டுக்கு பிறகு நிலவும் கடுமையான வெப்ப சூழல்

07-03-2019 நேரம் இரவு 7:40 மணி நான் காலையில் பதிவிட்டு இருந்தது போல இன்று பல இடங்களிலும் நிகழும் 2019 ஆண்டில் இதுனால் வரையில் பதிவானதில் மிக அதிக பட்ச வெப்பம் பதிவாகியுள்ளது.மார்ச் மாத முதல் தொடக்க நாட்களின் வெப்பமிகுதியான நாள் என்று கூட சொல்லலாம்.மேலும் கடந்த 10 ஆண்டுகளில் மார்ச் மாத முதல் இரண்டு வாரத்திற்குள் பதிவாகாத அளவு வெப்பநிலை தற்பொழுது பல இடங்களிலும் பதிவாகி வருகிறது குறிப்பாக 06-03-2019 ஆகிய நேற்று #தர்மபுரி பகுதியில் 40.2°C அதாவது 104.4°F அளவு வெப்பம் பதிவாகியிருந்தது இதுவரையில் மார்ச் மாதத்தில் தர்மபுரி மாவட்டத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை இதுதான் இதற்கு முன்னதாக 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் நாளில் 40°C அதாவது 104°F அளவு வெப்பம் பதிவாகியிருந்தது இதனிடையே 07-03-2019 ஆகிய இன்றும் தர்மபுரி அதிகபட்சமாக பகுதியில் 40°C அளவிலான வெப்பம் பதிவாகியுள்ளது அதேபோல #மதுரை மாநகரில் இன்று அதிகபட்சமாக கிட்டதட்ட 41°C அதாவது 105.8°F அளவு வெப்பம் பதிவாகியிருந்தது இதற்கு முன்பு 1996 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் நாளில் 41°C வெப்பம் பதிவாகியிருந்தது.தற்போது #தர்மபுரி  மாவட்டம் #நல்லம்பள்ளி அருகே மிக சிறிய மழை மேகங்கள் பதிவாகி வருகின்றன.

07-03-2019 இன்று மாலை 5:30 வரையில் பதிவான அளவுகளின் படி தமிழகத்தில் 100°F பாரன்ஹீட்டுக்கும் அதிகமான அளவு வெப்பம் பதிவாகிய சில பகுதிகளின் நிலவரம்.

மதுரை விமான நிலையம் (மதுரை மாவட்டம் ) - 105.8°F (41°C)
#கரூர் பரமத்தி (கரூர் மாவட்டம் )  - 105.8°F (41°C)
#சேலம் (சேலம் மாவட்டம் )  - 105.4°F (40.8°C)
#வேடசந்தூர் AWS (திண்டுக்கல் மாவட்டம் ) - 104.9°F (40.5°C)
#திருத்தணி (திருவள்ளூர் மாவட்டம் ) - 104.5°F (40.3°C)
தர்மபுரி (தர்மபுரி மாவட்டம் ) - 104°F (40°C)
#திருச்சிராப்பள்ளி (திருச்சி மாவட்டம் ) - 104°F (40°C)
#நாமக்கல் (நாமக்கல் மாவட்டம் ) - 103.1°F (39.5°C)
#பாளையம்கோட்டை (திருநெல்வேலி மாவட்டம் ) - 103.1°F (39.5°C)
#வேலூர் (வேலூர் மாவட்டம் ) - 102.9°F (39.4°C)
#பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம் ) - 101.6°F (38.7°C)
#நெய்வேலி AWS (கடலூர் மாவட்டம் ) - 101.6°F (38.7°C)
#கோவை விமான நிலையம் (கோவை மாவட்டம் ) - 101.4°F (38.6°C)
#வாடிப்பட்டி (மதுரை மாவட்டம் ) - 100.4°F (37.8°C)
#கும்பகோணம் (தஞ்சாவூர் மாவட்டம் ) - 100.4°F (37.8°C)

அனைவருக்கும் எனது இரவு வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்




01-03-2019 தமிழகத்தின் கடந்த 24 மணி நேர வானிலை

01-03-2019 நேரம் காலை 10:30 மணி கடந்த 24 மணி நேரத்தில் #சேலம் மாவட்டம் #எடப்பாடி பகுதியில் கிட்டத்தட்ட 103 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.இந்த மாதத்தின் முதல் நாளில் தமிழகத்தின் ஒரு பகுதியில் கிட்டத்தட்ட 100 மி.மீ க்கும் அதிகமான அளவு வெப்பசலன மழை பதிவாகியிருப்பது வரவேற்க்கத்தக்கது.அதேபோல #நெல்லை மாவட்டம் #சங்கரன்கோயில் பகுதியிலும் கடந்த 24 மணி நேரத்தில் 54 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது நான் முன்பு பதிவிட்டு இருந்தது போல இன்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் வெப்பசலன மழை பதிவாக வாய்ப்புகள் உள்ளது.அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புகள் உள்ள பகுதிகள் தொடர்பாக இன்று பிற்பகலில் மீண்டும் பதிவிடுகிறேன்.

01-03-2019 இன்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி தமிழகத்தில் மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம்.
------------------------------------------------------
எடப்பாடி (சேலம் மாவட்டம் ) - 103 மி.மீ
சங்கரன்கோயில் (திருநெல்வேலி மாவட்டம் ) - 54 மி.மீ
#சிவகிரி (திருநெல்வேலி மாவட்டம் ) - 37 மி.மீ
#பிளவாக்கால் -வருசநாடு அருகே (விருதுநகர் மாவட்டம் ) - 27.6 மி.மீ
#ஸ்ரீவில்லிபுத்தூர் (விருதுநகர் மாவட்டம் ) - 16 மி.மீ
#ஆயிக்குடி  (திருநெல்வேலி மாவட்டம் ) - 15.4 மி.மீ
#வேம்பக்கோட்டை (விருதுநகர் மாவட்டம் ) - 8.5 மி.மீ
#ஏற்காடு (சேலம் மாவட்டம் ) - 8.4 மி.மீ
#சங்கரிதுர்க் (சேலம் மாவட்டம் ) - 8.1 மி.மீ
செங்கோட்டை (திருநெல்வேலி மாவட்டம் ) - 7 மி.மீ
ஓமலூர் (சேலம் மாவட்டம் ) - 4 மி.மீ
பூதப்பாண்டி (கன்னியாகுமரி மாவட்டம் ) - 4 மி.மீ
சோத்துப்பாறை (தேனி மாவட்டம் ) - 3.6 மி.மீ
தென்காசி  (திருநெல்வேலி மாவட்டம் ) - 3.4 மி.மீ
கன்னிமார் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 3.2 மி.மீ
#திருப்பூர் (திருப்பூர் மாவட்டம் ) - 2 மி.மீ

28-02-2019 ஆகிய நேற்று காலை 8:30 மணிக்கு பதிவான மழை அளவுகளின் படி அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பதிவாகிய பகுதிகளின் நிலவரம்.

#பேச்சிப்பாறை (கன்னியாகுமரி மாவட்டம் ) - 15 மி.மீ
#சித்தாரல் (கன்னியாகுமரி மாவட்டம் ) - 8.6 மி.மீ
கிருஷ்னகிரி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 5.4 மி.மீ
நுங்கம்பாக்கம் (சென்னை மாவட்டம் ) - 4 மி.மீ
பரூர் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 3.2 மி.மீ
நெடுங்கள் (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 3 மி.மீ
என்னூர் துறைமுகம் (திருவள்ளூர் மாவட்டம் ) - 3 மி.மீ
மீனம்பாக்கம் (சென்னை மாவட்டம் ) - 2.8 மி.மீ
போச்சம்பள்ளி (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 1.2 மி.மீ
ஊத்தங்கரை (கிருஷ்னகிரி மாவட்டம் ) - 1 மி.மீ
சிவகிரி (திருநெல்வேலி மாவட்டம் ) - 1 மி.மீ


அனைவருக்கும் எனது காலை வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்

05-06-2018 அடுத்து வரக்கூடிய சில நாட்களுக்கு தமிழிகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் ?

05-06-2018 நேரம் காலை 10:15 மணி அடுத்த வரக்கூடிய சில நாட்களிலும் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே வெப்பசலன மழைக்கு வாய்ப்புகள் உண்டு அதே சமயம் 06-06-2018 ஆகிய நாளை முதல் தென்மேற்கு பருவமழை மேற்கு மாநிலங்களில் தீவிரமடைய தொடங்கலாம் இதனால் அரபிக்கடலை ஒட்டியுள்ள இந்திய மாநிலங்களான கேரளா முதல் மஹாராஷ்டிரா வரை உள்ள கடலோர மாவட்டங்களின்  அநேக பகுதிகளும்  பயனடையலாம்.குறிப்பாக 07-06-2018 ஆம் தேதி ஆகிய நாளை மறுநாள் முதல் குமரிக்கடல் ,அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் குறிப்பாக குமரி மாவட்டம் அருகே உள்ள கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ முதல் 65 கி.மீ வரை காற்று வீசக்கூடும் அதே போல தமிழக வட கடலோர மற்றும் தென்கடலோர பகுதிகளுக்கு அருகே உள்ள தென் மேற்கு வங்கக்கடல் பகுதியிலும் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் அப்பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ முதல் 60 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும்.அடுத்து வரக்கூடிய நாட்களில் மீனவர்கள் கடலுக்குள் செல்வதை தவிர்ப்பது நல்லது இது தொடர்பான எச்சரிக்கைகள் வானிலை ஆய்வு மையத்தால் இன்று அல்லது நாளை பிறப்பிக்கப்படலாம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சார்ந்த மீனவர்கள் அதன்படி நடப்பது நல்லது.மேலும் 07-06-2018 ஆகிய நாளை மறுநாள் முதல் தமிழக உள் மாவட்டங்களிலும் வட கடலோர மற்றும் தென் கடலோர மாவட்டங்களிலும் மேற்கு திசை காற்றின் வீரியம் அதிகரிக்கக்கூடும் இதனால் மேற்கு திசை காற்றின் வேகமும் அதிகரிக்கலாம் அதே சமயம் அடுத்து வரக்கூடிய நாட்களில் அதாவது 07-06-2018 முதல் தமிழக கடலோர மாவட்டங்களில் குறிப்பாக வட கடலோர மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலையானது அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.இது தொடர்பான தகவல்களை கீழே வழங்குகிறேன்.

மேலும் நான் கடந்த பதிவில் தெரிவித்து இருந்தது போல 08-06-2018 ஆம் தேதி அல்லது அதற்கு பிறகு கிட்டத்தட்ட 08-06-2018 ஆம் தேதி வாக்கில் இன்று எடுத்துக்கொள்வோம் வட வங்கக்கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புகள் இருப்பதாக பல்வேறு மாதிரிகளின் தகவல்களும் தெரிவிகின்றன மேலும் அது வங்கதேச கரையை ஒட்டி நகரலாம் இதன் காரணமாகவும் தமிழக வட கடலோர மாவட்டங்களில் அதற்கு அடுத்து வரக்கூடிய நாட்களிலும் பகல் நேர வெப்பநிலை அதிகரித்து இருக்க கூடிய வாய்ப்புகள் உள்ளது இந்த தருணத்தில் நான் கடந்த ஆண்டு நடந்த ஒரு நிகழ்வை இங்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் கடந்த ஆண்டு 01-06-2017 ஆம் தேதி அன்று காரைக்காலில் அதிகபட்சமாக 42.4° செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது பதிவேடுகளில் அடிப்படையில் பார்க்கப்போனால் இது வரை காரைக்கால் வரலாற்றிலேயே ஜூன் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை அது தான் நான் அப்பொழுது சென்னையில் இருந்தேன் இதை எதற்கு நான் இங்கே பதிவிட விரும்பினேன் என்றால் ஜூன் மாதத்தில் காரைக்காலில் அவ்வளவு அதிகமான வெப்பம் பகல் நேரத்தில் பதிவாகும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.ஆகையால் இயற்கையை பொறுத்தவரையில் இவைகளெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்று எதுவுமே கிடையாது வாய்ப்பு குறைவு என்று மட்டும் தான் நம்மால் கூற முடியும்.

தற்போதைய இந்த சூழல்களே அடுத்து வரக்கூடிய நாட்களிலும் தொடரும் பட்சத்தில் 08-06-2018  மற்றும் 09-06-2018 ஆகிய தேதிகளில் வட கடலோர மாவட்டங்களின்  அநேக இடங்களிலும் தற்பொழுது நிலவி வரும் வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில் 2 ° முதல் 3° செல்சியஸ் வரையில் பகல் நேர வெப்பநிலையானது அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது.இது தொடர்பான தகவல்களை அடுத்த வரக்கூடிய நாட்களில் உறுதி செய்கிறேன்.

07-06-2018 அல்லது 08-06-2018 ஆம் தேதிகளில் அடுத்து வரக்கூடிய வாரத்திற்கான வானிலை தகவல்களை பதிவிடுகிறேன்.இன்றைய மழைக்கான வாய்ப்புகள் தொடர்பாக பிற்பகலில் பதிவிடுகிறேன்.

மேலும் நான் மேலே குறிப்பிட்டு இருக்கும் தகவல்கள் அனைத்தும் தற்போதைய வானிலை சூழல்களை உள்ளடக்கிய ஓரு கணிப்பு தான் இதில் மாற்றங்கள் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.

07-04-2018 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கலாம் ?


07-04-2018 நேரம் அதிகாலை 1:55 மணி அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கலாம் என்பதனை பார்ப்பதற்கு முன் இந்திய வானிலை ஆய்வு மையம் கடந்த 05-04-2018 அன்று  வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பெரிய அளவிலான அம்சங்கள் குறித்து பார்ப்போம் (Large Scale Factors).

  • தற்பொழுது பசிபிக் கடலின் சமவெளிப்பரப்பில் லா- நினா வுக்கான சூழல்கள் நிலவி வருகின்றன. Monsoon Mission Climate Forecast System (MMCFS) மாதிரிகளின் முன்னறிவிப்புகளின் படி அடுத்து வரக்கூடிய வாரத்திலேயும் இதே நிலையே தொடரலாம்.
  • மேடன் - ஜுலியன் அலைவு ஆனது தற்பொழுது அதன் எட்டாவது கட்டத்தில் ஒன்றுக்கும் அதிகமான வீச்சு அளவுடன்  உள்ளது அடுத்து வரக்கூடிய வாரத்திலும் இதே அதன் எட்டாவது கட்டித்தேலேயே தொடரலாம் (என்னை பொறுத்தமட்டில் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் மேடன் - ஜுலியன் அலைவு ஆனது அதன் ஒன்றாவது கட்டத்தை அடையலாம் மேலும் இந்த மாத மத்தியில் அது குறைவான வீச்சு அளவுடன் இரண்டாவது கட்டத்துக்கு வரலாம் ).
  • இந்திய பெருங்கடல் இருமுனையானது (Indian Ocean Dipole) தற்பொழுது அதன் நடுநிலையான கட்டத்தில் உள்ளது.
நான் இதற்கு முந்தைய பதிவுகளில் வெப்பநிலை குறைவு மற்றும் மழை தொடர்பான தகவல்களை பதிவிட்டு இருந்திருந்தேன்.அதாவது நிகழும் 2018 ஆம் ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல இடங்களில் இயல்பான பகல் நேர வெப்பநிலை அளவை காட்டிலும் சராசரியாக 0.5° முதல் 1.0° செல்சியஸ் வரையில் குறைவான வெப்பநிலையே பதிவாக வாய்ப்பு இருப்பதாக  தெரிவித்து இருந்தேன்.அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியை பொறுத்தமட்டில் நிகழும் 2018 ஆம் ஆண்டு  கடந்த சில ஆண்டுகளை போல அல்லாமல் ஏப்ரல் மாதத்தில் அவ்வப்பொழுது மழைக்கான வாய்ப்புகளை அள்ளி வழங்கும் ஆண்டாக அமைய அதிக வாய்ப்புகள் உள்ளது.அடுத்து பிறக்க இருக்கும் வாரத்தில் தமிழகத்தின் பல இடங்களிலும் அவ்வப்பொழுது இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புகள் உண்டு ஆங்காங்கே ஆலங்கட்டி மழைக்கும் வாய்ப்புகள் உள்ளது இதன் காரணமாக பகல் நேர வெப்பநிலையானது இதற்கு முன்பு நிலவி வந்ததை விட மெல்ல மெல்ல குறைய தொடங்கலாம் அல்லது இதே பகல் நேர வெப்பநிலையே அடுத்து வரக்கூடிய நாட்களிலும் தொடரலாம். வெப்பநிலை மாறுபாடுகள் தொடர்பாக நமது பக்கத்தில் தினமும் அவ்வப்பொழுது பதிவிட முயற்சிக்கிறேன்.

07-04-2018 (இன்று ) மற்றும் 08-04-2018 (நாளை ) தமிழகத்தில் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புகள் உண்டு.மழைக்கு வாய்ப்பு இருக்கும் மாவட்டங்கள் / பகுதிகள் தொடர்பாக இன்று பிற்பகலில் பதிவிடுகிறேன்.புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களை பொறுத்தவரையில் இன்று வானம் அவ்வப்பொழுது மேக மூட்டத்துடன் காணப்படலாம்.தமிழகத்தின் அணைத்து கடலோர மாவட்டங்களிலும் கடலோர பகுதிகளில் இன்று வானம் அவ்வப்பொழுது மேக மூட்டத்துடன் காணப்படலாம் மேலும் இன்று முதல் இந்தியாவின் அஸ்ஸாம் , மேற்குவங்கம் , ஒரிசா , பீஹார் , உத்திரபிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மற்றும் வட மாநிலங்களிலும் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம்.

நிகழும் 2018 ஏப்ரல் மாதத்தில் அடுத்து பிறக்க இருக்கும் வாரத்தில் தமிழகத்தின் பல இடங்களிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புகள் உண்டு. 09-04-2018 அல்லது 10-04-2018 ஆம் தேதி முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழையின் அளவு அதிகரிக்க தொடங்கலாம் அதன் பிறகு வட கடலோர , உள்  ,தென் , தென் கடலோர , மேற்கு மற்றும் வட உள் மாவட்டங்களிலும் ஆங்காங்கே இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்புகள் உருவாகலாம்.

மழைக்கான வாய்ப்புகளை அவ்வப்பொழுது பதிவிட முயற்சிக்கிறேன். அனைவருக்கும் எனது அதிகாலை நேர வணக்கங்களை தெரிவித்து கொள்கிறேன்.

மேலும் நான் மேலே குறிப்பிட்டுள்ள மழைக்கான வாய்ப்புகள் அனைத்தும் தற்போதைய வானிலையை உள்ளடக்கிய ஒரு கணிப்பு தான் .இதில் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் பதிவிடுகிறேன்.


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை எப்பொழுது தொடங்கும் ? 2017 ஆம் ஆண்டு வட கிழக்கு பருவமழை தமிழகத்துக்கு எப்படி இருக்கும் ?

நிகழும் 2017 ஆம் ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் மூன்றாவது வாரத்தில் இருந்து  நவம்பர் முதல் வாரத்துக்குள் தொடங்கலாம்.
மேலே நான் பதிவேற்றம் செய்துள்ள படம்  தற்பொழுது நிலவும் வானிலையை  அடிப்படையாக கொண்டு அடுத்த 4 வரத்துக்கான வானிலை எப்படி இருக்கலாம் என்ற கணிப்பை உள்ளடக்கிய படம்.இதை நீடிக்கிப்பட்ட வரம்பியல் கணிப்பு  (Extended Range Forecast ) என்பார்கள்.அதில் இரண்டாவது வாரம் அதாவதுஅக்டொபேர் 13 - 19 ஆம் தேதிகளின் பிரிவில் கொடுக்கப்பட்டு  உள்ள படத்தில் மழை மேகங்கள் தமிழகத்தை நோக்கி கிழக்கு திசையில் இருந்து வருவது போல அமைந்துள்ளது அதனால் அக்டொபேர் 13 முதல் 19 ஆம் தேதிகள் வரை உள்ள நாட்களில் தமிழகத்துக்கு கிழக்கே வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த பட்சம் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்பு இருப்பதாக எடுத்துக் கொள்ளலாம் .ஆனால் அப்பொழுதும் அரபிக்கடல் பகுதியில் மழை மேகங்கள் தென்படுகின்றன என்பதை ஆக மேற்கு திசையில் இருந்தும் மழை மேகங்கள் உள்ளே வருவதை இவை உறுதிப்படுத்துகின்றன.அதே சமயம் நான்றவாது வாரம் அதாவது அக்டோபர் 27 முதல் நவம்பர் 02 ஆம் தேதிவரை உள்ள படத்தை பாருங்கள் வங்கக்கடல் பகுதியில் மழை மேகங்கள் தென்படுகின்றன ஆனால் அரபிக்கடல் பகுதியில் அப்படி எதுவும் தென்பட வில்லை.வங்கக்கடல் பகுதியில் இருக்கும் மழை மேகங்களும் கிழக்கு திசையில் நகர்வதைப்போல் தான் அமைந்துள்ளன.


இப்பொழுது நான் மேலே பதிவேற்றம் செய்துள்ள படத்தில் இரண்டாவது வாரம் அதாவது அக்டொபேர் 13 - 19 வரை உள்ள காலகட்டத்தை பாருங்கள் தமிழகத்துக்கு அருகே ஒரு மேலடுக்கு சுழற்சி தென்படுவதை நீங்கள் பார்க்கலாம் அதை சிகப்பு கோடிட்டு காட்டியுள்ளேன் அதேசமயம் நான்றவாது வாரத்திற்கான படத்தில் பாருங்கள் மேலடுக்கு சுழற்சி காரணமாக அரபிக்கடல் பகுதியில் இருந்து ஒரு சில இடங்களில் காற்று உள்ளே வருவதைப்போல உள்ளதே தவிர பெரும்பாலான பகுதிகளில் காற்றின் திசை கிழக்கு நோக்கியே உள்ளது.

இந்த தரவுகளை கொண்டு நான் நினைப்பது என்னவென்றால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு  பருவமழையானது  நவம்பர் மாதமே  அதிக பலனை வழங்க வாய்ப்புகள் உள்ளதாக கருதுகிறேன்.

எது எப்படியானாலும் இந்த மாதம் 17-10-2017 ,18-10-2017 அல்லது 19-10-2017 தேதிகளில் தமிழகம் அருகே வங்கக்கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாக சாத்திய கூறுகள் அதிகம் இருப்பதையே இவைகள் எடுத்துரைக்கின்றன அதனால் அதற்கு பிறகு வரக்கூடிய நாட்களில் தொடர்ந்து தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது அதனால் அக்டோபர் மூன்றாவது அல்லது நான்றாவது வாரத்திலேயே வட கிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக அறிவிக்கப் படலாம்.

வட கிழக்கு பருவமழை காலங்களில் பெய்யும் மழையின் அளவானது நிகழும் 2017 ஆம் ஆண்டு இயல்பை ஒட்டியே இருக்கும் என கருதுகிறேன்.இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே இப்படி தான் வானிலை இருக்கும் என்று கூறுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது.அந்த அளவுக்கான தரவுகளை வழங்கம் அளவுக்கான தொழில்நுட்ப வளர்ச்சி தற்போது இல்லை ஆகையால் அடுத்த ஒரு 10 முதல் 15 நாட்களுக்கு மட்டுமே இப்படி வானிலை இருக்கலாம் என ஆதாரங்களுடன் தெரிவிக்க முடியும்.வட கிழக்கு பருவமழை தொடங்கியபிறகு வானிலை குறித்து அவ்வப்பொழுது பதிவிடுகிறேன்.

14-09-2017 நேற்று புதுச்சேரியில் இரு சக்கர வாகனத்தில் அமைச்சருடன் இரவு நேர ரோந்தில் ஈடுபட்ட முதல்வர் நாராயணசாமி...இரவு நேரங்களில் புதுச்சேரி வீதிகளின் மின் விளக்கு வசதிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தகவல்

13-09-2017 (புதன்கிழமை ) நேற்று இரவு புதுச்சேரியின் சாலைகளில் இரு சக்கர வாகனத்தில் வேளாண் அமைச்சர் கமலக்கண்ணனுடன் இணைந்து முதல்வர் நாராயணசாமி திடீர் ஆய்வில் ஈடுபட்டார். திட்டத்திட்ட 25 கி.மீ தொலைவு நேற்று முதல்வர் இரு சக்கர வாகனத்தில் புதுச்சேரி வீதிகளில் பயணம் செய்ததாக முதல்வரின் முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் புதுச்சேரியில் உரிய மின்  விளக்கு வசதிகள் செய்யப்பட்டு உள்ளனவா பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனரா என்பதை ஆய்வு செய்யவே இந்த திடீர் ரோந்து நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.




 

புதுச்சேரியில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் - ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற கல்லூரி மாணவர்களை காவலர்கள் தடுத்தி நிறுத்தினர்

புதுச்சேரியில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரி தலைமை தபால் நிலையம் அருகே காலை முதல் ஒன்று திரண்ட மாணவர்கள் அமைதியான முறையில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ,தமிழக பாடத்திட்டத்தின் கீழ் பயின்று மாநில அளவிலான +2 பொதுத்தேர்வில் 1176 மதிப்பெண்கள் எடுத்தும் நீட் தேர்வில் தோல்வி அடைந்ததன் காரணமாக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து சிறு வயது முதல் மருத்துவராகும் தனது கனவு தகர்ந்ததால் மனமுடைந்து தற்கொலையில் ஈடுபட்ட அனிதா என்ற இளம்பெண்ணின் மரணத்திற்கு நீதி கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சற்று முன்பு புதுச்சேரியின் முக்கிய சாலைகளில் பேரணியாக சென்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற மாணவர்களை காவலர்கள் தடுத்து நிருத்தியதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.புதுச்சேரியில் மட்டுமல்லாமல் இன்று நீட் தேர்வுக்கு எதிர்ப்புக்கு தெரிவித்தும் மறைந்த மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கோரியும் தமிழகம் மற்றும்  புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்திற்கு பின் நீட் தேர்வை ரத்து செய்தே தீர வேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக முன் வைக்கப்பட்டு வருகிறது.

23-08-2017 புதுச்சேரியில் டி.டி.வி யா ? அறியாங்குப்பத்தில் திடீர் பரபரப்பு - வீராம்பட்டினம் விண்ட் பிளவர் ரிசார்ட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

தமிழக அதிமுகவின்  ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் அணிகளின் இணைப்பை எதிர்த்து தமிழக முதலமைச்சர் இ.பி.எஸ் க்கு இதுநாள் வரையில் அளித்து வந்த தங்களது ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுனரை சந்தித்து தனித்தனியே கடிதங்களை வழங்கிவிட்டு 19 தமிழக சட்டமன்ற உறுப்பினர்களும் புதுச்சேரி அரியாங்குப்பத்திற்கு அருகே உள்ள விண்ட் பிளவர் ரிசார்ட்டிர்க்கு வருகை தந்து ஓய்வு எடுத்து வருகின்றனர்.இந்நிலையில் இவர்களை சந்திக்க 23-08-2017 (இன்று ) டி.டி.வி . தினகரன் புதுச்சேரிக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

23-08-2017 செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக முன்னதாகவே டி.டி.வி.தினகரன் தெரிவித்து இருந்தார் இன்று புதுச்சேரி விண்ட் பிளவர் ரிசார்டுக்கு வருகை தந்து 19 சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்தபிறகு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் என செய்திகள்  வெளியாகி வருகின்றன .இதனால் அப்பகுதியில் இருக்கும் டி.டி.வி யின் ஆதரவாளர்கள் விண்ட் பிளவர் ரிசார்ட் இருக்கும் பாதையில் ஆங்காங்கே கூடி வருகின்றனர் இதனையடுத்து அரியாங்குப்பம் பகுதியில் புதுச்சேரி காவல் துறையினரும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த 19 தமிழக எம்.எல்.ஏ க்கள் புதுச்சேரியில் வந்து தங்கியிருப்பதால் அரியாங்குப்பம் பகுதியில் திடீர் பரபரப்பு நிலவி வருகிறது.



நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் நகரின் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் - சமூக ஊடகங்களில் புகைப்படங்கள் வெளியானதால் புதுச்சேரியில் பரபரப்பு

புதுவை மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நள்ளிரவில் இருசக்கர வாகனம் ஒன்றின் பின்னே அமர்ந்த படி புதுச்சேரியில் குற்றத் தடுப்பில் காவலர்கள் ஈடுபட்டு உள்ளனரா ? என்று ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வில் அவர் ஈடுபட்டு இருந்தபொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது அதிகார பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்த கிரண்பேடி இரவு நேரத்தில் புதுச்சேரி பாதுகாப்பான நகரமாக தான் உள்ளது எனவும்  இன்னுமும்  மேம்படுத்தலாம் என பதிவிட்டுள்ளார்.

இப்பொழுது கிரண்பேடி பதிவேற்றம் செய்த அந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.




புதுவை மாநிலத்தில் 51 மைக்ரானுக்கும் குறைவான அளவு கொண்ட நெகிழிப்பைகளை (Plastic Bags) பயன்படுத்த தடை - தரமில்லாத நெகிழிப்பைகளை பயன்படுத்துவது தெரியவந்தால் ஓராண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.

சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி ரங்காபிள்ளை வீதியில் புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழும அலுவலர்கள் மேற்கொண்ட ஆய்வில் சில கடைகளில் பயன்பாட்டில் இருந்த தரமற்ற 51 மைக்ரானுக்கும் குறைவான தடிமன் உள்ள நெகிழிப்பைகள் (Plastic Bags ) மற்றும் நெகிழிப்பொருட்கள் (Plastic Products ) பறிமுதல் செய்யப்பட்டன. ஆய்வு மேற்கொண்ட ஒருசில கடைகளிலேயே எப்படியென்றால் அப்பொழுது புதுவை மாநிலம் முழுவதும் எவ்வளவு தரமில்லாத நெகிழிப்பைகள் (Plastic Bags ) பயன்பாட்டில் இருக்கும் ? என்ற கேள்வி பொது மக்கள் மத்தியில் எழுந்தது.

இந்நிலையில் 51 மைக்ரானுக்கும் குறைவான நெகிழிப்பைகள் (Plastic Bags ) பயன்படுத்துவது தொடர்பாக புதுவை அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுசூழல் துறை உறுப்பினர் துவராககாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் இனி வரக்கூடிய காலங்களில் நெகிழிப்பைகளை தயாரிப்பவர் மற்றும் விற்பனையாளர்களிடம் 2 வார கால் இடைவேளையில் திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவே 51 மைக்ரானுக்கும் குறைவான தடிமனுள்ள நெகிழி தூக்குப்பைகளை தயாரிக்கவோ ,விற்பனைசெய்யவோ ,இருப்பு வைக்கவோ ,பயன்படுத்தவோ கூடாது என அறிவுறுத்தப்படுகிறது தவறும் பட்சத்தில் ரூபாய் 1 லட்சம் அபராதமும் 1 ஆண்டு வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கும்  குறைவான நெகிழிப்பொருட்களை விற்பனை செய்யவோ ,இருப்புவைக்கவோ ,தயாரிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


புதுச்சேரியில் மீண்டும் தொடங்கிய விமான சேவை - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கொடியசைத்து துவக்கிவைத்தார்

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் நிதிப் பற்றாக்குறை மற்றும் வருமானக் குறைவை காரணம் காட்டி புதுச்சேரி விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டது.புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்தே புதுச்சேரி விமான நிலையத்தில் விமானங்களை இயக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தது மேலும் இந்த விவகாரம் தொடர்பாக புதுவை முதல்வர் நாராயணசாமி பலமுறை டில்லிக்கு விரைந்து மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.பின்னர் கடந்த ஜூலை மாதம் முதல் புதுச்சேரியில் விமான சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 16-08-2017 (ஆகஸ்ட் 16) ஆம் தேதி முதல் புதுவை விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத் வரை மத்திய அரசின் உடான் திட்டத்தின் கீழ் புதிய ஸ்பைஸ் ஜெட் விமானம் தின்தோறும் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது மேலும் 16-08-2017 (ஆகஸ்ட் 16) ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் இந்த விமான சேவைக்கு கட்டணமாக ₹ 2,800 வசூலிக்கப்படும் எனவும் அப்பொழுது கூறப்பட்டு வந்தது.இதனிடையே  நேற்று 16-08-2017 அன்று புதுச்சேரியில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டு ஹைதராபாத்துக்கு ஸ்பைஸ் ஜெட் விமானம் இயக்கப்பட்டது .முதல்வர் நாராயணசாமி கொடியசைத்து இந்த விமான சேவையை தொடக்கிவைத்தார் மேலும் இந்த விமான போக்குவரத்துக்கு நபர் ஒன்றுக்கு பயணக்கட்டணமாக ₹2449 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




16-08-2017 இன்று 55 ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரி இந்தியாவுடன் இணைந்த தினம் - 1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் நாள் புதுச்சேரி மாநிலத்தை இந்தியாவுடன் இணைக்க பிரான்ஸ் நாட்டு பாராளுமன்றத்தில் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இந்தியாவின் அனைத்து மக்களும் நேற்று நாட்டின் 71வது சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்த தருணத்தில் இன்று புதுச்சேரியில் இந்தியாவுடன் இணைந்த சட்ட பூர்வ பரிமாற்ற நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.1962 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் (16-08-1962) நாள் பிரான்ஸ் நாட்டு நாடாளுமன்றம் புதுச்சேரி மாநிலத்தை இந்தியாவுடன் இணைக்க ஒப்புதல் அளித்து சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டது.இதனையடுத்து புதுச்சேரி ,காரைக்கால் ,மாஹி ,ஏனாம் பிராந்தியங்கள் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன.அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 16ஆம் நாளை சட்டபூர்வ பரிமாற்ற நாளாக (De-Jure Day) அங்கீகரித்து புதுச்சேரி அரசு விழாவாக கொண்டாடி வருகிறது.

இந்திய பிரதிநிதி கேவல்சிங் மற்றும் பிரஞ்சுப் பிரதிநிதி பியேர்லாந்தியும் கையெலுத்திட புதுச்சேரி இணைப்பு ஒப்பந்தம்  (De - facto -merger  of  Pondicherry ) 1954 ஆம் வருடம்  நவம்பர் 1ஆம் நாளில் நிறைவேற்றப்பட்டு புதுச்சேரி இந்தியாவுடன் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.அதன் தலைமை ஆணையாராக கேவல்சிங் நியமிக்கப்பட்டார் இருப்பினும் அதிகார பூர்வமான சட்டமுறை மாற்றுதல் ஒப்பந்தம் (Treaty of Cession ) 1956ஆம் ஆண்டு மே 28 ஆம் நாளன்று இந்தியாவின் சார்பாக பண்டித ஜவஹர்லால் நேருவும் ,இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரும் ,பிரஞ்சு குடியரசு தலைவருக்காக அதன் இந்திய தூதுவர் ஸ்தானிஸ் லாஸ் ஆஸ்ட்ரோக்கும் (Stansis Ostrog ) கையெழுத்திட இனிதே நிறைவேரியது.

1962 ஆம் வருடம் மே 27 ஆம் நாளில் இந்த ஒப்பந்தத்தை பிரெஞ்சு பாராளுமன்றம் உறுதிப்படுத்தியது.அதற்குப்பிறகு ஆகஸ்ட் மாதம் 16 ஆம் நாள் 1962 ஆம் வருடத்தில் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேருவும்,பிரஞ்சு தூதர் ழான் போல் கார்திவேயும் இணைப்பு ஒப்பந்தத்தில் கையெலுத்திட
புதுச்சேரி இணைப்பு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது . அன்றிலிருந்து புதுச்சேரி மாநிலம் அதிகாரப்பூர்வமாக (De -Jure ) இந்திய நாட்டில் ஒன்றாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.


புதுச்சேரியில் அரசே குவாரிகளை அமைத்து மணல் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஷாஜஹான்

புதுச்சேரியில் தொடர்ந்து அதிகரித்து வரும் மணல் திருட்டுக்கள் குறித்த புகார்களின் அடிப்படையில் நேற்று அமைச்சர் ஷாஜஹான் சங்கராபரணி ஆற்றுப் பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார் ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது : சட்டத்துக்கு புறம்பாக சங்கராபரணி ஆற்றில் மணல் திருட்டு நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்தது அதன் பேரில் ஆய்வு மேற்கொண்டோம் பொக்லைன் இயந்திரம் மூலமும் லாரிகள் மூலமும் இங்கு மணல் திருடப்பட்டு வந்திருப்பது தெரிகிறது.தற்பொழுது மணல் திருட்டு நடைபெற்றுள்ள இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளோம் மேலும் வருவாய்துறையும் காவத்துறையும் இணைந்து மணல் திருட்டை தடுக்கும் வகையில் கமிட்டி ஒன்று அமைக்கப்படும் என தெரிவித்தார் மேலும் புதுச்சேரியில் ஏற்பட்டு இருக்கும் கடும் மணல் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் அரசே மணல் குவாரிகளை அமைத்து மணல் விற்பனையை முறைப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்தார்.


எங்க ஊரு எம்.எல்.ஏ வுக்கே டெங்கு காய்ச்சல்னா .....நாங்கெல்லாம் எம்மாத்திரம் ! புலம்பும் புதுச்சேரி முத்தையால்பேட்டை வாழ் பொது மக்கள்

கடந்த சில நாட்களாக காய்ச்சலுக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி முத்தையால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ வையாபுரி மணிகண்டனுக்கு காய்ச்சல் குறைந்த பாடு இல்லையாம் அதனால் கடந்த 04-08-2017 (ஆகஸ்ட் 4) ஆம் தேதி அன்று புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட அந்த ரத்த மாதிரிகளை பரிசோதித்து பார்த்ததில் எம்.எல்.ஏ வுக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

தற்பொழுது அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அவரின் ரத்த மாதிரிகள் ஹைதராபாத்தில் உள்ள ஆய்வு கூடத்துக்கும் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.



எங்க ஊரு எம்.எல்.ஏ வுக்கே டெங்கு காய்ச்சல்னா .....நாங்கெல்லாம் எம்மாத்திரம் !  என்று புதுச்சேரி முத்தையால்பேட்டை தொகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.



புதுச்சேரியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் புதுச்சேரி  யூனியன் பிரதேசத்தில் புதுச்சேரி ,காரைக்கால் ,மாஹி ,ஏனாம் என நான்று மாவட்டங்கள் உள்ளன.கடந்த 2011 ஆம் ஆண்டு கணக்கிடப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி புதுச்சேரி மாவட்டத்தில் அதிகபட்சமாக  9,50,289 ( ஒன்பது லட்சத்து ஐம்பதாயிரத்து இருநூற்று எண்பத்து ஒன்பது)  பேரும் இதற்கு அடுத்தபடியாக காரைக்கால் மாவட்டத்தில் 2,00,222 ( இரண்டு லட்சத்து இருநூற்று இருபத்து இரண்டு ) பெரும் இதற்கு அடுத்த படியாக ஏனாம் மற்றும் மாஹியில் முறையே  55,626 (ஐம்பத்து ஐந்தாயிரத்து ஆருனுற்று இருபத்து ஆறு ) மற்றும் 41,816 (நாற்பத்து ஓராயிரத்து எண்ணுற்று பதினாறு ) பெரும் வாழ்ந்து வருவதாக கணக்கிடப்பட்டது.

மாவட்டம்                                                            மக்கள்தொகை

புதுச்சேரி மாவட்டம்            ---------------->      9,50,289

காரைக்கால் மாவட்டம்      ---------------->     2,00,222

ஏனாம் மாவட்டம்                  ---------------->        55,626

மாஹி மாவட்டம்                   ---------------->        41,816


 புதுச்சேரி மாவட்டத்தில் புதுச்சேரி ,உழவர்கரை என 2 நகராட்சிகளும் ,காரைக்கால் மாவட்டத்தில் காரைக்கால் நகராட்சியும் ,ஏனாமில் ஒரு நகராட்சியும் ,மாஹியில் ஒரு நகராட்சியும் என புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 5 நகராட்சிகள் செயல்பட்டு வருகின்றன.

2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நகராட்சிகளின் மக்கள் தொகை.

 நகராட்சி                                                            மக்கள்தொகை

புதுச்சேரி                       ---------------->              2,44,377

உழவர்கரை                  ---------------->              3,00,104

காரைக்கால்                ---------------->                  86,838

ஏனாம்                            ---------------->                   55,626

மாஹி                             ---------------->                   41,816


இந்த மக்கள் தொகை கணக்கெடுப்புகள் எடுக்கப்பட்டு 6 ஆண்டுகள் நிறைவு பெற்றறுவிட்ட நிலையில் இந்த 6 ஆண்டுகளில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் மக்கள் தொகையின் எண்ணிக்கை கணிசமான விகிதத்தில் அதிகரித்து உள்ளது.பக்கத்தில் உள்ள மாநிலமான தமிழகத்தில் மாநில அரசு புதுச்சேரியை விட மக்கள் தொகையிலும் வருமானத்திலும் குறைவான புள்ளிகள் பெற்ற நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்தி சமீபத்தில் அறிவித்தது.

மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் புதுச்சேரியை இடம்பெற செய்ய புதுச்சேரி நகராட்சியுடன் தாலுக்காவில் உள்ள கொம்யூன் பஞ்சாயத்துகளின் ஒரு சில பகுதிகளை இணைத்து புதுச்சேரி அரசு ஒப்புதலுக்கு அனுப்பியது அது மத்திய அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

புதுச்சேரி மாவட்டத்தில்  ஸ்மார்ட் சிட்டி அமைய உள்ள பகுதிகள் அனைத்தையும் இணைத்து அப்படியே ஒரு மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் என்று  பொது மக்கள் புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை விடுத்து  வருகின்றனர்.

அதே போல காரைக்கால் நகராட்சியுடன்  அதற்கு அருகே உள்ள கொம்யூன் பஞ்சாயத்துகளின் ஒரு சில பகுதிகளை இணைத்து  உழவர்கரை மற்றும் காரைக்கால் நகராட்சிகளில் வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் அவற்றை பெரு நகராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும் எனவும் பொது மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

காரைக்காலுக்கு அருகே இருக்கும் நாகப்பட்டினம் நகராட்சியுடன் நாகூர் பகுதியை இணைத்து நாகபட்டினத்தை தேர்வு நிலை நகராட்சியாக தமிழக அரசு அறிவித்தது அதேபோல திட்டத்திட்ட 1,40,000 மக்கள் தொகையை கொண்ட கும்பகோணம் நகராட்சியை சிறப்பு நிலை நகராட்சியாக அறிவித்து பெருநகராட்சியாக தரம் உயர்த்தியது.

ஒரு நகரத்தின் மக்கள் தொகை ,வருமானம் மற்றும் வளர்ச்சிக்கு ஏற்ப அதன்  தரம் உயர்த்தபட்டால் மட்டுமே அந்நகரங்களில் வாழும் மக்களுக்கு சிறந்த சேவையை அரசால் வழங்க முடியும் ஆனால் புதுச்சேரியில் இது வரை அப்படி செய்யப்படவில்லை இனியாவது புதுச்சேரியை மாநகராட்சியாகவும் , உழவர்கரை மற்றும் காரைக்கால் நகராட்சிகளை பெருநகராட்சிகளாகவும்  புதுச்சேரி அரசு தரம் உயர்த்துமா ? என்ற கேள்வி புதுவை மாநில மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது.

சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி - கடலூர் கிழக்கு கடற்கரை புதிய ரயில் பாதை திட்டம் - நிலம் கையகப்படுத்த முதல் கட்ட பணிகள் தொடங்கியது

தமிழகத்தின் தலை நகரான சென்னையில் இருந்து பெருங்குடி ,கோவளம் ,மாமல்லபுரம் வழியாக புதுச்சேரி மற்றும் கடலூருக்கு கிழக்கு கடற்கரை ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு கடந்த 2007 ஆம் ஆண்டு ரயில்வே துறை ஒப்புதல் வழங்கியது இதனையடுத்து கடந்த 2011 ஆம் ஆண்டு கிழக்கு கடற்கரை ரயில் பாதைக்கான சர்வே பணிகளுக்காக ₹25 கோடி ரூபாய் ஒடுக்கப்பட்டது ஆனால் நிலம் கையகப்படுத்தும் பணிகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ளவில்லை இத்திட்டத்துக்கு 523 கோடி ரூபாய் செலவாகும் என அப்பொழுது மதிப்பீடு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு சுமார் 10 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த இத்திட்டம் குறித்து இந்த ஆண்டு மே மாதம் செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சென்னை - மாமல்லபுரம்  - புதுச்சேரி - கடலூர் ரயில் பாதை திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்திருந்தார் அந்த தகவலை அறிய http://www.karaikalindia.com/2017/05/Central-govt-gives-permission-for-chennai-mamallapuram-puducherry-cuddalore-railway-route.html

 இதனையடுத்து புதுச்சேரி பத்திரப்பதிவுத்துறை கிழக்கு கடற்கரை ரயில் பாதை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் முதல் கட்ட பணிகளை தொடக்கியுள்ளது உழவர்கரை ,வில்லியனூர் ,பாகூர்  மற்றும் திருக்கனூர் சார் பதிவாளர்களுக்கு இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.அதன்படி புதுச்சேரி 100 அடி சாலைக்கு கிழக்கு பக்கமாக இரட்டை இருப்பு பாதை புதுச்சேரி மற்றும் கடலூர் இடையே அமைய உள்ளது எனவே கிருமாம்பாக்கம் ,மனப்பட்டு ,பிள்ளையார்குப்பம் ,உச்சிமேடு ,பரிக்கல்பட்டு ,குருவிநத்தம் ஆகிய கிராமங்களில் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எண்களில் உள்ள நிலங்களை பத்திரப்பதிவு மற்றும் பரிவர்த்தனை செய்ய தடை விதிக்கப்பட்டு இருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



புதுச்சேரி விமான நிலையத்தில் பிரிபெய்டு ஆட்டோ சேவை - ஆளுநர் கிரண்பேடி

வருகின்ற 16-08-2017 (ஆகஸ்ட 16) ஆம் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத்துக்கு விமான சேவை தொடங்க உள்ள நிலையில் இன்று திடீர் என புதுவை மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரி விமான நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.அப்பொழுது விமான நிலையத்தில் பயணிகளுக்கு செய்யப்பட்டு இருக்கும் வசதிகள் குறித்து கேட்டறிந்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் புதுச்சேரி விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பிரிபெய்டு ஆட்டோ சேவை தொடங்க திட்டமிட பட்டுள்ளதாக தெரிவித்தார்.


28-07-2017 புதுச்சேரியில் 100 அடி ரோடு மேம்பாலத்தின் மற்றொரு பாதை இன்னும் 4 மாத காலத்திற்குள் திறக்கப்படும் - முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு - இன்று மேம்பாலத்தின் ஒரு பகுதியை திறந்து வைத்து முதல்வர் நாராயணசாமி காரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்

கடந்த 2013 - 2014 ஆம் நிதி ஆண்டில் மத்திய சாலை நிதி மற்றும் ரயில்வே நிதியில் இருந்து ₹ 40 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் காட்டும் பணிகள் புதுச்சேரி 100 அடி சாலையில்  தொடங்கப்பட்டது திட்டத்திட்ட  1.207 கி.மீ நீளமுடிய இந்த மேம்பாலத்தில் 0.835 கி.மீ நீளமுள்ள கிழக்கு பகுதி கட்டி முடிக்கப்பட்டு இன்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்களால் போக்குவரத்துக்கு திறந்து வைக்கப்பட்டது.பின்னர் அந்த மேம்பாலத்தில் முதல்வர் நாராயணசாமி தனது மகிழுந்தில் பயணம் செய்து பாலத்தை பார்வையிட்டார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த பாலத்தின் கிழக்கு பகுதி மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டதன் மூலம் கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னை ,திருவண்ணாமலைக்கு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார் மேலும் மற்றொரு பகுதியின் இன்னும் 4 மாத காலத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு பாதை திறக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.




28-07-2017 புதுச்சேரி 100அடி சாலையில் புதிய மேம்பாலத்தை முதல்வர் நாராயணசாமி இன்று திறந்து வைக்கிறார்

புதுச்சேரி 100 அடி சாலையில் புதிய மேம்பால கட்டுமான பணிகள் பல ஆண்டு காலமாக நடைபெற்று வந்தது இப்பொழுது முடியும் அப்பொழுது முடியும் என எதிர்பார்க்கப்பட்ட அந்த மேம்பால கட்டுமான பணிகள் நிதிப்பற்றாக்குறை காரணமாக நீண்டுகொண்டே சென்றது. ஒருகட்டத்தில் புதுச்சேரியில் தொடர்ந்து அதிகரித்து வந்த போக்குவரத்து நெரிசல்களால் புதுச்சேரியின் ஊடகங்களாலும் பொதுமக்களாலும் இந்த மேம்பால கட்டுமான பணிகள் எப்பொழுது நிறைவடையும் என்பது குறித்த கேள்விகள்  முன்வைக்கப்பட்டது.இதனையடுத்து கூடிய விரைவில் இந்த மேம்பால பணிகள் நிறைவு பெற்று மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என புதுச்சேரி அரசால் அறிவிக்கப்பட்டது இந்நிலையில் 28-07-2017 (வெள்ளிக்கிழமை ) இன்று ₹40 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த மேம்பாலத்தின் ஒரு பகுதியை முதல்வர் நாராயணசாமி திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த மேம்பாலத்தின் ஒரு பகுதி திறக்கப்படுவதால் கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக வெளியூர் செல்லும் பயணிகள் பயன் அடைவர்.

புதுச்சேரி விவசாயிகள் போராட்டம் நடத்த புதுடெல்லிக்கு பயணம்

28-07-2017 (ஜூலை 28) ஆம் தேதி டெல்லியில் போராட்டம் நடத்த புதுச்சேரியில் இருந்து 35 விவசாயிகள் அடங்கிய குழு ஒன்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றுள்ளது.கடந்த 2016 ஆம் ஆண்டு வட கிழக்கு பருவமழை பொய்த்ததால் புதுச்சேரி மாநிலம் முழுவதிலும் கடும் வறட்சி நிலவியது  விவசாய நிலங்களில் பயிர்கள் நீரின்றி கருகின அதனால் வங்கிகளில் தாங்கள் பெற்ற விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்று புதுச்சேரி மாநில விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

புதுச்சேரி கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன்களை ரத்து செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுத்து கோப்புகளை துணை நிலை ஆளுநருக்கு அனுப்பியதாகவும் ஆனால் ஆளுநர் அந்த கோப்புகளில் கையெழுத்திட மறுப்பதாகவும் அரசியல் வட்டாரத்தில் செய்திகள் பரவி வந்தன இதன் காரணமாக சில நாட்களுக்கு முன் சாலையில் ஆய்வு மேற்கொண்டிருந்த  ஆளுநரை சுற்றி வளைத்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர் இந்நிலையில் விவசாய கடன்களை ரத்து செய்ய ஆளுநர் தடையாக இருப்பதாக கோரி டெல்லியில் போராட்டம் நடத்த இன்று புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளனர் புதுவை மாநில விவசாயிகள்.




Related Posts Plugin for WordPress, Blogger...